கவிச்சக்ரவர்த்தி கம்பர் மயிலாடுதுறை மாவட்டம் திருவழுந்தூர் (எ) தேரழுந்தூர் என்னும் ஊரில் பிறந்தவர் என்று அறியப்படுகிறது.
பொதுவாக மூன்றாம் குலோத்துங்கச் சோழனின் காலமான கி.பி. 12ஆம் நூற்றாண்டே இவருடைய காலம் என்றும், சிலர் இவருடைய காலம் ஒன்பது அல்லது பத்தாம் நூற்றாண்டு என்றும் கருதுகின்றனர். கம்பருடைய தந்தை பெயர் ஆதித்தன் என்று கூறப்படுகிறது.
கம்பரை முதலில் ஆதரித்தவர் சடையப்ப வள்ளல் என்பவர். பின்பே சோழ மன்னன் கம்பரை ஆதரித்து வந்ததாகவும் கூறுகின்றனர்.
கம்பனின் மகன் கவிஞனான அம்பிகாபதி, சோழ மன்னனின் மகளான அமராவதி என்பவளைக் காதலித்ததாகவும், இதன் காரணமாகச் சோழ மன்னன் அம்பிகாபதியைக் கொன்றுவிட்டதாகவும் வரலாறு கூறுகிறது. இதனால் மனமுடைந்த கம்பர் சோழ நாட்டை விட்டு வேறு நாட்டிற்குச் சென்று விட்டதாக அறியப்படுகிறது. அவர் தனது இறுதி நாட்களைச் சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டை அருகே கழித்ததாகச் சான்றுகள் கூறுகின்றன.
கவிச்சக்ரவர்த்தி கம்பர், கிபி 1250 ஆம் ஆண்டில் இயற்கை எய்தினார் என்று தெரிகிறது.
"கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்" எனும் பழமொழியும், ‘கவிச்சக்ரவர்த்தி’ மற்றும் "கல்வியிற் பெரியோன் கம்பன்" என்ற பட்டங்களும் கம்பரின் கவித்திறமையைப் பறைசாற்றும்.
கம்பர் சமஸ்கிருதம் மற்றும் தமிழ் மொழியில் கற்றுத் தேர்ந்து சொல்வன்மை கொண்டவராக இருந்தர். அதையே பாரதி “கல்வி சிறந்த தமிழ்நாடு, புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு” எனப் பாடியுள்ளார். அதோடு மட்டுமல்லாமல், கம்பர் ஆழமான கவிதை அனுபவமும், கற்பனை ஆற்றலும், புலமைத் திறனும், உவமான நயமும், சந்த ஞானமும் பெற்று, ‘கம்பராமாயணம்’, ‘சிலையெழுபது’, ‘சடகோபர் அந்தாதி’, ‘சரசுவதி அந்தாதி’, ‘திருக்கை வழக்கம்’, ‘ஏரெழுபது’ மற்றும் ‘மும்மணிக்கோவை’ (கம்பர் எழுதிய நூல்கள் பட்டியல்) போன்ற சிறந்த நூல்களைப் படைத்தார். இதில், ‘கம்பராமாயணம்’, தமிழ் இலக்கியத்தில் தலைசிறந்த காவியமாகக் கருதப்படுகிறது.
தமிழில் பாக்களில் வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்று நான்கு வகைகள் உள்ளது போல மூன்று இனங்கள் உள்ளன. அவை - தாழிசை, துறை, விருத்தம் என்பன. கம்பர் விருத்தம் பாடுவதில் மிகவும் வல்லவராகக் கருதப்பட்டார். அதையே பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் “விருத்தமென்னும் ஒண்பாவிற் குயர்கம்பன்” எனக் கூறியுள்ளார்.
தன்னுடைய தமிழ்ப் படைப்புகளால் தனக்கு அழிவு இல்லை என்று எண்ணிய கண்ணதாசன், கம்பனைப் பற்றி “காலமெனும் ஆழியிலும், காற்றுமழை ஊழியிலும் சாகாது கம்பனவன் பாட்டு, அது தலைமுறைக்கு அவன் எழுதி வைத்த சீட்டு” எனக் கூறியுள்ளார்.
கம்ப இராமாயணத்தில் தசரதனின் மருத நிலத்து கோசலை நாடு எப்படி இருந்தது என்பதை பின்வருமாறு கூறுகின்றார்:
தண்டலை மயில்கள் ஆட, தாமரை விளக்கம் தாங்க,
கொண்டல்கள் முழவின் ஏங்க, குவளை கண் விழித்து நோக்க,
தெண் திரை எழினி காட்ட, தேம் பிழி மகர யாழின்
வண்டுகள் இனிது பாட, மருதம் வீற்றிருக்கும் மாதோ.
தண்டலை மயில்கள் ஆட- சோலைகளிலே மயில்கள் ஆட; தாமரை விளக்கம் தாங்க- தாமரை மலர்கள் விளக்குகளை ஏந்தி நிற்க; கொண்டல்கள் முழவின் ஏங்க- மேகங்கள் மத்தளம் போல ஒலிக்க; குவளை கண் விழித்து நோக்க- குவளைக் கொடிகளில்
மலர்கள் கண்போல் விழித்துப் பார்க்க; தெண் திரை எழினி காட்ட- நீர்நிலைகளின் அலைகள் திரைச்சீலை போலக் காட்ட; தேம் பிழி மகர யாழின்- தேனை ஒத்த மகர யாழ் இசை போல; வண்டுகள் இனிது பாட- வண்டுகள் இனிமையாகப் பாட; மருதம் வீற்றிருக்கும்-இவ்வாறு மருத நாயகி வீற்றிருக்கிறாள்.
கூற்றம் இல்லை, ஓர் குற்றம் இல்லமையால்;
சீற்றம் இல்லை, தம் சிந்தனையின் செம்மையால்;
ஆற்றல் நல் அறம் அல்லது இல்லாமையால்,
ஏற்றம் அல்லது, இழித்தகவு இல்லையே.
கூற்றம் இல்லை- கொடுமை இறப்புகள் நாட்டில் இல்லை; ஓர் குற்றம் இல்லாமையால்- கோசல நாட்டில் எவரிடமும் ஒரு குற்றமும் இல்லாமையால்; சீற்றம் இல்லை- சினம் நாட்டில் இல்லை; தம் சிந்தையின் செம்மையால்- நாட்டு மக்களின் மனச் செம்மையால்; ஆற்றல் நல் அறம் அல்லது இல்லாமையால்- நல்ல அறச் செயல் செய்வதை தவிர வேறு செயல்கள் இல்லையாதலால்; ஏற்றம் அல்லது இழிதகவு இல்லை- மேன்மையைத் தவிர இழிவு அந்நாட்டில் இல்லை.
கள்வார் இலாமைப் பொருள் காவலும் இல்லை; யாதும்
கொள்வார் இலாமைக் கொடுப்பார்களும் இல்லை மாதோ.
யாதும் கொள்வார் இலாமை கொடுப்பார்களும் இல்லை- எதையும் யாசிப்பவர் இல்லையாதலால் கொடையாளிகளும் இல்லை.
இடம் கொள் சாயல் கண்டு, இளைஞர் சிந்தைபோல்,
தடங் கொள் சோலைவாய், மலர் பெய் தாழ் குழல்
வடம் கொள் பூண் முலை மடந்தைமாரொடும்
தொடர்ந்து போவன-தோகை மஞ்ஞையே.
இடம் கொள் சாயல் கண்டு- பெண் மயில்களின் சாயலைப் பார்த்து; இளைஞர் சிந்தை போல்- இளைஞர் மனத்தைப் போல; தடம் கொள் சோலைவாய்- விசாலமான சோலையினிடத்தே; மலர் பெய்தாழ் குழல்- மலரணிந்த நீண்ட கூந்தலையும்; வடம் கொள் பூண் முலை- முத்து மாலைகளை அணிந்த தனங்களையும் உடைய; மடந்தை மாரொடு- பெண்களுடனே; தொடர்ந்து போவன- பின்தொடர்ந்து செல்வனவாம்; தோகை மஞ்ஞை - தோகையை உடைய ஆண் மயில்களே.
வயிர நல் கால் மிசை, மரகதத் துலாம்,
செயிர் அறப் போதிகை, கிடத்தி, சித்திரம்
உயிர்ப் பெறக் குயிற்றிய, உம்பர் நாட்டவர்
அயிர் உற இமைப்பன, அளவு இல் கோடியே.
வயிர நல்கால் மிசை- வயிரத்தாலாகிய நல்ல தூண்களின் மேலே; மரகதத் துலாம்- மரகதத்தாலாகிய உத்தரத்தை; செயிர் அறப் போதிகை கிடத்தி- குறையின்றிப் பொருந்துமாறு போதிகையின் மீது கிடத்தி; சித்தரம் உயிர் பெறக் குயிற்றிய- ஓவியங்கள் உயிருள்ளன போலத் தோன்றுமாறு செய்து; உம்பர் நாட்டவர் அயிர் உற
இமைப்பன - தேவகள் விமானமோ என ஐயத்துடன் நோக்குவனவும் ஆகிய மாளிகைகள்; அளவில் கோடியே- அளவற்ற கோடிக் கணக்கானவை.
தணி மலர்த் திருமகள் தங்கு மாளிகை
இணர் ஒளி பரப்பில் நின்று இருள் துரப்பன,
திணி சுடர் நெய்யுடைத் தீ விளக்கமோ?
மணி விளக்கு: அல்லன் மகளிர் மேனியே.
தணிமலர்த் திருமகள் - குளிர்ந்த தாமரைப் பூவில் வாழும் இலக்குமி தேவி; தங்கும் மாளிகை- தங்கியிருக்கும் அயோத்தி நகர மாளிகைகள்; இணர் ஒளிபரப்பி நின்று- மிக்க ஒளி வீசி நின்று; இருள் துரப்பன-இருளை ஓட்டுபவை; திணிசுடர் நெய்யுடைத் தீவிளக்கமோ- செறிந்த ஒளியுடைய நெய்விளக்குகளின் விளக்கமோ; மணிவிளக்கல்ல-
மணிகளின் ஒளியோ அல்ல; மகளிர் மேனியே- அந்நகரத்து மகளிரின் மேனி ஒளியே.
மன்னவர் தரு திறை அளக்கும் மண்டபம்.
அன்னம் மென் நடையவர் ஆடு மண்டபம்.
உன்ன அரும் அரு மறை ஓது மண்டபம்.
பன்ன அருங் கலை தெரி பட்டி மண்டபம்.
மன்னவர் தரு திறை அளக்கும் மண்டபம் - சிற்றரசர்கள் கப்பத்தை எண்ணி அளவிடும் மண்டபங்களும்; அன்னம் மென் நடையவர் ஆடு மண்டபம் - அன்னம் போன்ற நடையையுடைய மாதர்கள் ஆடும் மண்டபங்களும்; உன்னரும் அருமறை ஓதும் மண்டபம் - அருமறை ஓதும் மண்டபங்களும்; பன்னரும் கலைதெரிபட்டி மண்டபம் - கலைகளையும் அறிஞர்கள் ஆராயும் பட்டி மண்டபங்களும் அயோத்தி நகரெங்கும் இருந்தன.
கல்லாது நிற்பார் பிறர் இன்மையின் கல்வி முற்ற
வல்லாரும் இல்லை; அவை வல்லர் அல்லாரும் இலை;
எல்லாரும் எல்லாப் பெருஞ் செல்வமும் எய்தலாலே.
இல்லாரும் இல்லை; உடையார்களும் இல்லை மாதோ.
கல்லாது நிற்பார் பிறர் இன்மையின்- நல்ல கலை நூல்களைப் படிக்காது நிற்பவர்கள் இல்லை ; கல்வி முற்ற வல்லாரும் இல்லை- கல்வியில் முற்றும் வல்லவர்களும் அங்கு இல்லை; அவை வல்லர் அல்லாரும் இல்லை- அக் கல்வித் துறைகளில் வல்லவரும் இல்லாதவரும் இல்லை; எல்லோரும் எல்லாப் பெருஞ்செல்வமும் எய்தலாலே- எல்லோரும் எல்லாச் செல்வமும் அடைந்திருப்பதாலே; இல்லரும் இல்லை உடையார்களும் இல்லை-அந்த நகரத்திலே இல்லாதவரும் இல்லை உடையவர்களும் இல்லை. இந்தப் பாடலின் சிறப்பு ஒன்று இல்லாமையான் வருவது அதன் எதிர்மறை என்பதின் உண்மை கூறல்.
தாய் ஒக்கும் அன்பின்; தவம் ஒக்கும் நலம் பயப்பின்;
சேய் ஒக்கும். முன் நின்று ஒரு செல் கதி உய்க்கும் நீரால்;
நோய் ஒக்கும் என்னின் மருந்து ஒக்கும்; நுணங்கு கேள்வி
ஆயப் புகுங்கால். அறிவு ஒக்கும்;- எவர்க்கும் அன்னான்.
தாய் ஒக்கும் அன்பின் -அன்பு செலுத்துவதில் தாயை ஒப்பவனாவான்; தவம் ஒக்கும் நலம் பயப்பின் - நன்மை செய்வதில் தவத்தைப் போன்றவன்; சேய் ஒக்கும் - பெற்ற மகனை ஒத்திருப்பான்; முன்நின்று ஒரு செல்கதி உய்க்கும் நீரான்- கடைசிக் காலத்தில் முன்னே நின்று இறுதிச்சடங்குகளைச் செய்து அவர்களை நற்கதியில் சேரச் செய்யும் தன்மையினால்; நோய் ஒக்கும் என்னின் - குடிமக்களுக்கு நோய்வருமாயின்; மருந்து ஒக்கும் - அதைப் போக்கி. குணப்படுத்தும் மருந்து போன்றவன்; நுணங்கு கேள்வி ஆயப்புகுந்தால்- நுணுக்கமான கலைத்துறைகளை ஆராயப்புகுந்தால் ; அறிவு ஒக்கும்- நுண் அறிவினை ஒத்திருப்பான்; எவர்க்கும் அன்னான் - எவர்க்குமான மன்னன்.
தசரதன் புத்திரன் வேண்டிச் செய்த வேள்வியில் பூதம் சோற்றுப் பிண்டத்துடன் எழுதல்:
ஆயிடை கனலின்நின்று அம் பொன் தட்டம் மீத்
தூய நல் சுதை நிகர் பிண்டம் ஒன்று - சூழ்
தீ எரிப் பங்கியும் சிவந்த கண்ணும் ஆய்
ஏயென பூதம் ஒன்று எழுந்தது, ஏந்தியே.
ஆயிடை கனலின் நின்று - அப்போது அந்த வேள்வித்
தீயிலிருந்து; அம்பொன் தட்டம் மீத் - அழகிய ஒரு பொன்
தட்டத்தின் மேலே; தூய நல் சுதை நிகர் பிண்டம் ஒன்று - தூய்மையான
அமுதத்தை ஒத்த ஒரு பிண்டத்தை; தீ எரிப்பங்கியும் சிவந்த கண்ணுமாய் - தீ எரிவது
போன்ற தலை மயிரும் சிவந்த கண்ணும் உடையதாக; ஏயென பூதம் ஒன்று - ஏயென்று
ஒரு பூதமானது; எழுந்தது ஏந்தியே- தாங்கிக் கொண்டு விரைந்து எழுந்தது.
ஒரு பகல் உலகு எலாம் உதரத்துள் பொதிந்து
அரு மறைக்கு உணர்வு அரும் அவனை அஞ்சனக்
கரு முகிற் கொழுந்து எழில் காட்டும் சோதியை
திரு உறப் பயந்தனள் திறம் கொள் கோசலை.
ஒருபகல் உலகு எலாம் உதரத்துள் பொதிந்து-பிரளயத்தின்போது எல்லா உலகங்களையும் தனது வயிற்றிலே அடக்கி; அருமறைக்கு உணர்வு அரும்அவனை - அருமறைகளாலும் தெரிந்து கொள்ள இயலாத பரமனை; அஞ்சனக் கருமுகில் கொழுந்து எழில்காட்டும் சோதியை - கண்மை போன்று கரிய மேகக் கொழுந்தின் அழகைக் ஒத்து நிற்கும் சோதி வடிவாய்த் திகழ்பவனை; திறம்கொள் கோசலை திருஉறப் பயந்தனள் - திறமையுடைய கோசலை மங்கலம் உற ஈந்தாள்.
தன்னை ஆதரித்த சடையப்ப வள்ளலை முடிந்தபோதெல்லாம் தன் கவிதையில் வாழ வைத்தார் கம்பர். ராமர் பட்டாபிஷேகத்தைக் கூறும் பாடலில்
அரியணை அனுமன் தாங்க,
அங்கதன் உடைவாள் ஏந்த,
பரதன் வெண்குடை கவிக்க,
இருவரும் கவரி பற்ற,
விரைசெறி குழலி ஓங்க,
வெண்ணெயூர்ச் சடையன் தங்கள்
மரபுளோர் கொடுக்க வாங்கி,
வசிட்டனே புனைந்தான் மௌலி.
என்பார்.
அரியணை – சிங்காதனம்; இருவரும் கவரி பற்ற - இலக்குவ சத்துருக்கர் இருவரும் சாமரை வீச; விரைசெறி குழலி - மணக்கும் கூந்தலை உடைய; மரபுளோர் – முன்னோர்; வசிட்டனே புனைந்தான் மௌலி - வசிட்ட முனிவர் மகுடம் சூடினார்.
https://archive.org/details/acc.-no.-7203-kambaramayanam-1984
https://archive.org/details/kmm-0322-sri-kambaramayanam-balakandam-1967/page/6/mode/2up
Read more: ஒளவையார் வரலாறு
Copyright © 2025 R and R Consultant
Total Hits:286713